திண்டுக்கல், அக்.21: கொரோனாவை காரணம் காட்டி மத்திய அரசு ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதை நிறுத்தக்கூடாது. மத்திய அரசு போனஸ் குறித்த அறிவிப்பு வெளியிட வேண்டும் என வலியுறுத்தி, திண்டுக்கல் ரயில் நிலைய 2வது நடைமேடையில் எஸ்.ஆர்.எம்.யூ. தொழிற்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் கோவிந்தராஜ் தலைமை தாங்கினார். உதவி கோட்ட செயலாளர் செந்தில்குமார் முன்னிலை வகித்தார். கோட்ட தலைவர் ரவிச்சந்திரன் சிறப்புரையாற்றினர்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட எஸ்.ஆர்.எம்.யூ மதுரை கோட்ட செயலாளர் ரபிக் பேசுகையில், மத்திய அரசு போனஸ் குறித்த அறிவிப்பு வெளியிட வேண்டும். இல்லையென்றால் இந்தியா முழுவதும் ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவார்கள். முதல் கட்டமாக 2 மணி நேரம் ரயில்களை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என்று தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தின் போது மத்திய அரசுக்கு எதிராகவும், ரயில்வே துறைக்கு எதிராகவும் கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் சங்க நிர்வாகிகள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.