அறந்தாங்கி, அக்.21:மணமேல்குடி அருகே உள்ள கார்க்கமலம் கிராமத்தைச் சேர்ந்தவர் டெக்ஸ்ட் அரவிந்தன்(35). இவர் கடந்த 2015ம் ஆண்டு கார்க்கமலத்தை சேர்ந்த பெண் ஒருவரை கொலை செய்து எரித்த வழக்கும், 2016ம் ஆண்டு சாக்கோட்டை அருகே பெண் ஒருவரை கண்மாயில் மூழ்கடித்து கொலை செய்து நகைகளை வழிப்பறி செய்த வழக்கும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் ஜாமீனில் வெளிவந்துள்ளார். இந்நிலையில் அரவிந்தன் 16 வயது சிறுவன் ஒருவனை துணைக்கு வைத்துக் கொண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் பொன்னமராவதி, அறந்தாங்கி, ஆவுடையார்கோயில் பகுதிகளில் தொடர் நகை வழிப்பறியில் ஈடுபட்டு வந்தார். கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு ஆவுடையார்கோவில் பகுதியில் பெண் ஒருவரிடம் 10 சவரன் நகையை வழிப்பறி செய்து சென்ற நிலையில் அங்கே வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமரா பதிவை போலீசார் ஆய்வு செய்த போது வழிப்பறி செய்தது டெக்ஸ்ட் அரவிந்தன் என்பதை போலீசார் உறுதி செய்தனர்.
உடனடியாக ஆவுடையார்கோவில் அருகே வடக்கலூர் கிராமத்தில் தற்போது வசித்து வந்த டெஸ்ட் அரவிந்தன் வீட்டிற்கு சென்ற போலீசார் அங்கே இருந்த அரவிந்தனை கைது செwய்தனர். அவன் வீட்டில் வைத்திருந்த 10 சவரன் நகை உள்ளிட்ட மற்ற பகுதிகளில் வழிப்பறி செய்த நகைகளை போலீசார் கைப்பற்றினர். வழிப்பறி செய்வதற்கு அரவிந்தன் அழைத்துச் சென்ற சிறுவனை போலீசார் திருச்சி சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர். குற்றவாளி டெக்ஸ்ட் அரவிந்தனை அறந்தாங்கி குற்றவியல் நீதிமன்ற நீதிபதியிடம் ஆவுடையார்கோவில் காவல் ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் தலைமையிலான போலீசார் அழைத்து சென்று ஆஜர்படுத்தினர். குற்றவாளியை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.