கரூர், அக். 21: கரூர் வேளாண்மை இணை இயக்குநர் சிவசுப்ரமணியன் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: கரூர் மாவட்டத்தில் தற்போது 11 ஆயிரம் ஹெக்டேர் பரப்பில் சம்பா நடவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அடியுரம் மற்றும் மேலுரம் இடும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். பல்வேறு ரசாயான உரங்கள் இருந்தாலும் தழைச்சத்து உரமான யூரியாவை ஏழை, எளிய விவசாயிகள் விரும்பி வயலுக்கு அதிகளவில் பயன்படுத்துகின்றனர். நாட்டின் உணவு உற்பத்தியுடன் நேரடி தொடர்பு கொண்டிருப்பதால் உரங்களின் விலை அரசால் நிர்ணயிக்கப்படுகிறது.
அதன் உற்பத்தி, விற்பனை ஆகியவை உர கட்டுப்பாட்டு சட்டம் 1985ன்படி அரசால் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்த ஆணையின்படி, அதிகபட்ச சில்லரை விற்பனை விலைக்கு மிகாமல் உரங்கள் விநியோகம் செய்யப்பட வேண்டும்.
அரசின் மானியத்தில் உற்பத்தியாகும் உரங்கள் முறையான விவசாய பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். எடை, தரம் ஆகியவை சரியாக இருக்க வேண்டும். வாங்கும் விவசாயியின் ஆதார் எண் கொண்டு பட்டியலிடப்பட வேண்டும். விவசாயிகளின் நில அளவுக்கேற்ற உரங்களை மட்டுமே வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன.
உர விற்பனை நிலையம் துவங்கும் போதே இந்த ஆணையின்படி நடப்பதாக விற்பனையாளர்கள் ஒப்புக் கொள்கின்றனர். அதன்பின்னர், அதிக விலைக்கு உரங்களை விற்பது, செயற்கையான தட்டுப்பாட்டை உருவாக்குவது, ஒரே நபர் பெயரில் அவர்கள் சாகுபடி செய்யும் நில அளவுக்கு ஏற்றவாறு மட்டுமே உரங்களை வழங்க வேண்டும். எந்த காரணம் கொண்டும் அரசு நிர்ணயித்துளள விலையை மீறி விற்பனைக் செய்யக் கூடாது. இது தண்டனைக்குரிய குற்றமாகும்.
விவசாயிகள் உரங்களின் தற்போதைய விலையை உழவன் செயலி முலம் எளிதாக அறிந்து கொண்டு விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். உர விற்பனையில் தரம் மற்றும் விலையில் ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் உடன் வேளாண்மை அலுவலரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.