×

குமரியில் மீண்டும் கொளுத்தும் வெயில் பேச்சிப்பாறை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் விநியோகம்

நாகர்கோவில், அக்.20: குமரி மாவட்டத்தில் மீண்டும் வெயில் கொளுத்தி வரும் நிலையில் பேச்சிப்பாறை அணையில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.  குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. அணைகள் உச்சநீர்மட்டத்தை எட்டிய நிலையில் அணையில் இருந்து மறுகால் வழியாக தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்தநிலையில் மாவட்டத்தில் இரண்டு நாட்களாக மீண்டும் வெயில் கொளுத்த தொடங்கியுள்ளது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. மேலும் அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பும் குறைக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் நேற்று காலை நிலவரப்படி பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் 44.90 அடியாகும். அணைக்கு 1004 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 317 கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறந்து விடப்பட்டிருந்தது. பேச்சிப்பாறை அணையில் இருந்து 3 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் உபரியாக திறந்து விடப்பட்டிருந்த நிலையில் தற்போது அந்த அளவு குறைக்கப்பட்டு 1025 கன அடி தண்ணீர் உபரியாக மறுகால் வழியாக வெளியேற்றப்பட்டு வருகிறது.

பெருஞ்சாணி நீர்மட்டம் 71.80 அடியாகும். அணைக்கு 594 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 800 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. சிற்றார்-1ல் 14.59 அடியாக நீர்மட்டம் காணப்பட்டது. அணைக்கு 10 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. சிற்றார்-2ல் 14.69 அடியாக நீர்மட்டம் காணப்பட்டது. அணைக்கு 13 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பொய்கையில் 17.30 அடியாக நீர்மட்டம் உள்ளது.
மாம்பழத்துறையாறு அணையின் நீர்மட்டம் 54.12 அடியாகும். அணைக்கு 12 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 12 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது. முக்கடல் அணை நீர்மட்டம் 24.2 அடியாகும். அணைக்கு 4 கன அடி தண்ணீர் வரத்து காணப்பட்ட நிலையில் 7.42 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டிருந்தது.

Tags : Kumari ,Veil Pechipparai Dam ,
× RELATED குமரியில் டாரஸ் லாரியால் தொடரும் விபத்து