மதுரை, அக். 20: முன்பு நிராகரிக்கப்பட்டவருக்கு மீண்டும் பட்டியல் வகுப்பு சான்றிதழ் வழங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் ஆர்டிஓ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் ஜி.கல்லுப்பட்டியைச் சேர்ந்த சின்னத்தாய், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் ெசய்த மனுவில், ‘‘ஜி.கல்லுப்பட்டி ஊராட்சித் தலைவர் பதவி பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. நான், போட்டியிட்டேன். என்னை எதிர்த்து போட்டியிட்ட மகேஸ்வரி 39 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இவர் பட்டியலினத்தவர் என போலி ஆவணங்கள் கொடுத்து ஜாதி சான்றிதழ் பெற்றுள்ளார். இதனால், பட்டியலினத்தவருக்கான வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது.
எனவே, அவர் தலைவராக தொடர தடை விதிக்க வேண்டும். அவருக்கு வழங்கப்பட்ட ஜாதி சான்றிதழை ரத்து செய்து, சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் விசாரித்தனர். மனுதாரர் வக்கீல் கண்ணன் ஆஜராகி, ‘‘பட்டியலினத்தவர் என ஏற்கனவே ஒரு முறை இவர் வாங்கிய ஜாதி சான்றிதழ் ரத்து செய்யப்பட்டது. பின்னர், 2017ம் ஆண்டிலும் இவரது விண்ணப்பத்தை விஏஓ நிராகரித்துள்ளார்.
ஆனால், இதையெல்லாம் மறைத்து மீண்டும் போலி ஆவணங்கள் மூலம் பட்டியலினத்தவர் என சான்று வாங்கியுள்ளார்’’ என வாதிட்டார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட போது எப்படி மீண்டும் சான்றிதழ் வழங்கப்பட்டது? மனுதாரர் கோரிக்கை தொடர்பாக அளித்துள்ள மனுவை பெரியகுளம் ஆர்டிஓ அனைத்து தரப்பினரிடமும் கருத்து கேட்டு, சட்டத்திற்கு உட்பட்டு உரிய நடவடிக்கையை 12 வாரத்திற்குள் எடுக்க வேண்டும்’’ என உத்தரவிட்டுள்ளனர்.