×

வாகன சோதனையில் வசமாக சிக்கினர் கடப்பாரையால் கதவை உடைத்து கொள்ளையடிக்கும் திருடர்கள் சின்னமனூரில் பரபரப்பு


சின்னமனூர், அக்.20: சின்னமனூரில் ஓட்டல் மேனேஜர் வீட்டின் கதவை கடப்பாரையால் உடைத்து நகை திருடிய ஆசாமிகள் ஒரு வருடத்திற்கு பின் சிக்கியுள்ளனர். சின்னமனூர் அருகே குச்சனூர் ராஜபாளையம் மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அழகேசன். ஓட்டல் மேனேஜர். இவரது மனைவி விஜயலட்சுமி (47), மகள் வர்ஷா. இவர்கள் கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 24ம் தேதி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு வீட்டின் கதவை கடப்பாறையால் உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், விஜயலட்சுமி அணிந்திருந்த 9 பவுன் நகைகளை பறித்துக் கொண்டு தப்பினர். இதன் மதிப்பு ரூ.1.50 லட்சம் ஆகும். இது குறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்தனர். கடந்த ஒரு வருடமாக திருடர்கள் சிக்கவில்லை.

இந்நிலையில் காவல்நிலைய ஆய்வாளர் முத்துலட்சுமி நேற்று முன்தினம் சின்னமனூரில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த இருவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள், சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தை சேர்ந்த பெருமாள் மகன் சுப்பிரமணி(55), மாரியப்பன் மகன் வடிவேல் (32) என தெரியவந்தது. இவர்கள் ஒரு வருடத்திற்கு முன்பு ஓட்டல் மேனேஜர் அழகேசன் வீட்டில் நகையை திருடியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து நகையை மீட்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். வேறு ஏதும் சம்பவங்களில் தொடர்புள்ளதா எனவும் விசாரித்து வருகின்றனர்.

Tags : Thieves ,Chinnamanur ,house ,
× RELATED தேவாரம் பகுதியில் குறைந்து வரும் நாட்டு கோழி வளர்ப்பு