கோவில்பட்டி, அக். 18: கோவில்பட்டி வீரவாஞ்சிநகர் சங்கரலிங்க சுவாமி, சங்கரேஸ்வரி புற்றுக்கோயிலில் நவராத்திரி விழா சிறப்பு பூஜையுடன் துவங்கியது. முதல் மூன்று நாட்கள் துர்கா பூஜையும், அடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமி பூஜையும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி பூஜையும் நடக்கிறது. முதல் நாளன்று காலை கோடி சக்தி விநாயகர், வள்ளி தேவசேனா சமேத கல்யாணமுருகன், சுவாமி, அம்பாள் மற்றும் பரிகார மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. தொடர்ந்து கொலு மண்டபத்தில் உள்ள நவராத்திரி கொலுவிற்கு சிறப்பு பூஜை நடந்தது. பூஜைகளை கோயில் அர்ச்சகர் சுப்பிரமணி செய்தார். விழாவில் கோயில் தலைவர் ராஜபாண்டி, பொருளாளர் சுப்பிரமணி, நிர்வாக கமிட்டி உறுப்பினர்கள் மற்றும் சுற்றுவட்டார மக்கள் திரளாக சமூக இடைவெளியுடன் பங்கேற்று முககவசம் அணிந்து தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை தேவகி, ரவிநாராயணன், முருகன், பிரேமா, ஜெய் முகேஷ், ராஜா, ஜெய் வைஷ்ணவி ஆகியோர் செய்திருந்தனர்.