×

மின் கட்டண நிலுவை தொகை செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிப்பு


திருப்பூர், அக்.18: மின் கட்டண நிலுவை தொகை விரைவில் செலுத்தாவிட்டால் இணைப்பு துண்டிக்கப்படும் என மின்வாரியம் அறிவித்துள்ளது. கொரோனா ஊரடங்கு, மார்ச் 25ம் தேதி துவங்கியதால் தொழில் நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டன. பொதுமக்களும் வீடுகளில் முடங்கி இருந்தனர். மின்வாரிய ஊழியர்கள், மாதாந்திர மின்நுகர்வு கணக்கீட்டு பணியை மேற்கொள்ள இயலவில்லை. இதனால் முந்தைய மாதங்களில் செலுத்திய கட்டணத்தையே செலுத்துமாறு, மின்வாரியம் அறிவித்தது. இதற்காக, ஜூன் 15 வரை, கால அவகாசம் வழங்கப்பட்டது. இருப்பினும், மின்கட்டணம் செலுத்தாமல் இருப்பதால், பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.இது குறித்து, திருப்பூர் மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஜவஹர் கூறியதாவது: கொரோனா ஊரடங்கால், போதிய அவகாசம் வழங்கியும், நுகர்வோர் சிலர் கட்டண நிலுவையை செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். மின் கட்டண பாக்கியை விரைந்து செலுத்தாவிட்டால் மின் இணைப்பு துண்டிக்கப்படும். இனிவரும் நாட்களில், உரிய காலக்கெடுவுக்குள் மின் கட்டணம் செலுத்தாமல் இருந்தால், மின் துண்டிப்பு செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags :
× RELATED ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி ஆண்டுவிழா