ஊட்டி,அக்.18: ஊட்டி ரோஜா பூங்கா நுழைவு வாயில் பகுதிகளில் உள்ள பாத்திகளில் அலங்கார செடிகள் நடவு செய்யும் பணிகள் துவங்கப்பட்டுள்ளது. ஊட்டிக்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். குறிப்பாக, அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் கர்நாடக மாநில சுற்றுலா பயணிகள் அதிகளவு வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகள் தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, தொட்டபெட்டா, படகு இல்லம் போன்ற பகுதிகளுக்கு செல்வது வழக்கம். ரோஜா பூங்காவிற்கு செல்லும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில், அலங்காரங்கள் மேற்கொள்வது வழக்கம். பொதுவாக முதல் சீசனான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் அனைத்து செடிகளில் மலர்கள் பூத்து குலுங்கும் வகையில், அவைகளை தயார் செய்வது வழக்கம்.
அதேபோல், இரண்டாம் சீசனான செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களிலும் இச்செடிகளில் மலர்கள் பூக்கும் வகையில் பணிகள் மேற்கொள்ளப்படும். இம்முறை கொரோனா காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளது. எனினும், பூங்காவை தொடர்ந்து தோட்டக்கலைத்துறையினர் பராமரித்து வருகின்றனர். தற்போது மழையின் காரணமாக பூங்காவில் உள்ள மலர்கள் உதிர்ந்துள்ளது. அதேசமயம், பூங்காவில் உள்ள புல் மைதானத்தை சீரமைக்கும் பணிகள், பூங்காவில் உள்ள பாத்திகளில் அலங்கார மலர் செடிகள் மற்றும் தாவரங்கள் நடவு பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. தற்போது பூங்கா நுழைவு வாயில் பகுதியில் உள்ள நினைவு தூணை சுற்றிலும் அலங்கார மலர் செடிகள் மற்றும் நாற்று நடவு பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த செடிகள் ஓரிரு வாரங்களில் வளர்ந்துவிடும். முதல் சீசனுக்கான பூங்கா தயார் செய்யும் பணிகள் துவக்கும் போது, இந்த அலங்கார செடிகளே சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக அமையும்.