×

குழந்தையை கொன்று மனைவி தீக்குளித்து சாவு ரயில்வே ஊழியரிடம் ஆர்டிஓ, டிஎஸ்பி விசாரணை

நெல்லை, அக். 16: மானூர் அருகேயுள்ள பள்ளமடையை சேர்ந்தவர் ஆறுமுகநயினார் என்ற அமல்ராஜ் (36). சென்னையில் ரயில்வே ஒர்க்ஷாப்பில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பாக்கியலட்சுமி (31). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. ஒன்றரை வயதில் கங்கா என்ற பெண் குழந்ைத இருந்தது. சென்னையில் வசித்து வந்த தம்பதியினர் இடையே குடும்ப பிரச்னை காரணமாக தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் காலையில் ஆறுமுகநயினார், மனைவி மற்றும் குழந்தையுடன் நெல்லை திரும்பினார். மனைவி மற்றும் குழந்தையை மானூர் அருகே மாவடியில் உள்ள பாக்கியலட்சுமி பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு ஆறுமுகநயினார் பள்ளமடைக்கு சென்று விட்டார்.
இந்நிலையில் பாக்கியலட்சுமி குழந்தையுடன் தீக்குளித்தார்.

அவர்களது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு குழந்தையும், பாக்கியலட்சுமியும் அடுத்தடுத்து இறந்தனர். முன்னதாக பாக்கியலட்சுமி நெல்லை மாஜிஸ்திரேட்டிடம் அளித்துள்ள மரண வாக்குமூலத்தில், தன்னை பற்றி சமூக வலைதளங்களில் தவறான கருத்துகளை கணவர் பரப்பியதாகவும், இதில் தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்து தீக்குளித்ததாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து மானூர் இன்ஸ்பெக்டர் ராமர் வழக்குப்பதிவு செய்தார். பாக்கியலட்சுமிக்கு திருமணமாகி 3 ஆண்டுகளே ஆவதால் நெல்லை சப்-கலெக்டர் சிவகிருஷ்ணமூர்த்தி, தாழையூத்து டிஎஸ்பி அர்ச்சனா ஆகியோர் ஆறுமுகநயினாரிடம் விசாரிக்கின்றனர்.

Tags : RTO ,DSP ,investigation ,railway employee ,
× RELATED மேட்டூர் ஆர்டிஓ அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறப்பு