விருதுநகர், அக்.16: விருதுநகர் மாவட்டத்தில் பயோ மெட்ரிக் முறையில் ரேஷன் பொருட்கள் விநியோகம் கடந்த 7ம் தேதி துவங்கியது. பழைய பிஓஎஸ் மிஷின்களில் கைரேகை பதிவிற்கான சாப்ட்வேர்களை அப்டேட் செய்து வழங்கியுள்ளனர். எந்த ரேஷன் கடைக்கும் புதிய மிஷின் வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. மிஷின் வழங்கப்பட்ட நாள் முதல் கடைகளில் கூட்டம் அலைமோதி வரும் நிலையில், தினசரி 20க்கும் குறைவான கார்டுதாரர்களுக்கு மட்டுமே பொருட்களை வழங்க முடிகிறது. சர்வர் பிரச்னை எனக்கூறி அதிகாரிகள் சரிகட்ட முயற்சி செய்கின்றனர். ஆனால், கடைகளில் விற்பனையாளர்களிடம் மக்கள் தகராறு செய்யும் அவலநிலை தொடர்கிறது. இதனால் தெளிவான நிலையை அதிகாரிகளால் எடுக்க முடியவில்லை.
இந்நிலையில் விருதுநகரில் நேற்று ரேஷன் கடையை திறந்த போது மிஷின்கள் இயங்காததை தொடர்ந்து விற்பனையாளர்கள் குடிமைப்பொருள் வழங்கல் தனிவட்டாட்சியர் பொன்ராஜிடன் மிஷின்களை ஒப்படைக்க சென்றனர். ஆனால், இயங்காத பயோமெட்ரிக் மிஷினை தனிவட்டாட்சியர் வாங்க மறுத்தார். அதை தொடர்ந்து தமிழ்நாடு பொது விநியோக மாநில துணைத்தலைவர் தொந்தியப்பன் தலைமையில் மனு அளித்தனர். அந்த மனுவில்,`` பயோமெட்ரிக் மிஷின் அக்.7ல் வழங்கப்பட்டது.
முதல் சரிவர இயங்கவில்லை. அதிகாரியிடம் அக்.13ல் புகார் தெரிவித்தோம். சரி செய்வதாக உறுதி அளித்த நிலையில், நேற்று(அக்.15) அதே நிலைதான் தொடர்கிறது. ரேஷன் வாங்க வரும் மக்கள் விற்பனையாளர்கள் தான் காரணம் என குறை கூறுகின்றனர். அதனால் பயோமெட்ரிக் மிஷினை சரிவர இயக்கி கொடுக்கும் வரை எந்த பொருளும் விநியோகம் செய்ய இயலாது’’ என தெரிவித்துள்ளனர். இதே போல வத்திராயிருப்பில் கூட்டுறவு பண்டகசாலையில் உள்ள ரேஷன் கடைகளில் இயந்திரங்கள் பழுது ஏற்பட்டது. இதனால் பழுதடைந்த 32 இயந்திரங்களை ரேஷன் கடை ஊழியர்கள் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.