குஜிலியம்பாறை, அக். 16: குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது. ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர் சங்க ஒன்றிய செயலாளர் தங்கராஜ் தலைமை வகிக்க, மாவட்ட தலைவர் ராமசாமி, செயலாளர் கணேசன் மார்க்சிஸ்ட் மாவட்ட குழு உறுப்பினர் பாலசுப்பிரமணி மற்றும் 150க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் தமிழக அரசு அறிவித்த குடிநீர் மேல்நிலை தொட்டி பம்ப் ஆபரேட்டர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.2600ல் இருந்து ரூ.4000ஆக உயர்த்தி வழங்கியதை அமல்படுத்த வேண்டும். தூய்மை காவலர்களுக்கு மாத ஊதியம் ரூ.2600ல் இருந்து ரூ3600 ஆக உயர்த்தி வழங்கியதை அமல்படுத்த வேண்டும்.
அதேபோல் 7வது ஊதியக்குழு 21 மாத சம்பள நிலுவை தொகையை குடிநீர் பம்ப் ஆபரேட்டர்களுக்கு வழங்க வேண்டும். மாதம் இருமுறை மேல்நிலை தொட்டி சுத்தம் செய்ய ரூ1000 வீதம் சிறப்பு தொகை வழங்க வேண்டும். அடையாள அட்டை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் கோரிக்கை மனுவை பிடிஓ கிருஷ்ணனிடம் வழங்கினர். மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.