பழநி, அக். 16: கொரோன எதிரொலியாக பழநி கோயிலில் நவராத்திரி அம்பு போடுதல் விழா ரத்து செய்யப்படுவதாக கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பழநி கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய திருவிழாக்களில் ஒன்று நவராத்திரி. 9 நாட்கள் நடைபெறும் இவ்விழா நாளை (சனி) மலைக்கோயிலில் காப்புகட்டுதலுடன் துவங்க வேண்டும். முக்கிய நிகழ்ச்சியான கோதைமங்கலத்தில் அம்பு போடுதல் நிகழ்ச்சி 25ம் தேதி நடைபெற வேண்டும்.
அன்றைய நாளில் கோயில் நடை அடைக்கப்பட்டு முத்துக்குமாரர் கோதைமங்கலம் சென்று அம்பிடும் நிகழ்வு நடைபெறும். இதனை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவர்.
ஆனால் கொரோனா பரவலால் பழநி கோயில்களில் பங்குனி உத்திரம், சித்திரைத் திருவிழா, வைகாசி விசாகம், ஆவணி பிரமோற்சவம் உள்ளிட்ட விழாக்கள் நடத்தப்படவில்லை. தற்போதும் அரசின் ஊரடங்கு அமலில் இருப்பதால் நவராத்திரி விழாவில் காப்பு கட்டுதல், சுவாமி புறப்பாடு, அம்பு வில் போடுதல் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படாது. மலைக்கோயில், பெரியநாயகி அம்மன் கோயிலில் நாளை முதல் 24ம் தேதி வரை சிறப்பு அலங்காரம், வழிபாடு நடைபெறும்.
பூஜை நேரங்கள் தவிர்த்து மற்ற நேரங்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். திருக்கோயில் நித்தயப்படி பூஜைகள் அனைத்தும் ஆகம விதிகளுக்கு உட்பட்டு உரிய நேரங்களில் கோயிலின் பழக்க வழக்கப்படி நடைபெறுமென பழநி கோயில் இணை ஆணையர் (பொ) நடராஜன் தெரிவித்துள்ளார்.