திருச்சி, அக்.16: திருச்சி சோமரசம்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பல்வேறு அசத்தலான நடவடிக்கைகளால் மாவட்ட அளவிலான அரசு பள்ளிகளில் முக்கியத்துவம் பெற்று வருகிறது. கொரோனாவிலிருந்து உலகம் விடுபட்டு பள்ளிகள் விரைவில் திறக்க வேண்டி சர்வ சமய பிரார்த்தனைக் கூட்டம் இப்பள்ளியில் நேற்று நடந்தது. ஏஇஇஓ மருதநாயகம் தலைமை வகித்தார். சாரண இயக்கத்தின் மணப்பாறை மாவட்ட செயலாளர் மில்டன் முன்னிலையில் குறைந்த எண்ணிக்கையிலான சாரண-சாரணியர் மாணவர்கள் பங்கேற்றனர். ஒரு செவ்வக வடிவிலான கட்டம் வரைந்து அந்த கட்டத்துக்கு மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, இந்து, முஸ்லிம், கிறிஸ்த்துவம் ஆகிய மும்மத சின்னங்கள் அதில் வடிவமைக்கப்பட்டிருந்தன. டாக்டர் செந்தில்குமார், சாரண இயக்க ஆசிரியர்கள் கிருபாகரன், பூபதி, பள்ளி தலைமை ஆசிரியர் முருகாம்பிகை, ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
வெப்சைட் துவக்கம்: இப்பள்ளியில் வெப்சைட் (www.pumssorpettai.in < http://www.pumssorpettai.in/ >) துவங்கப்பட்டுள்ளது. பஞ்சாயத்து தலைவர் குணவதி துவக்கி வைத்தார். இந்த வெப்சைட் மூலம் பள்ளியின் வரலாறு, மாணவர், ஆசிரியர் எண்ணிக்கை, வருகை, தேர்ச்சி விகிதம் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். மேலும் ஆன்லைன் வகுப்பில் கிராமப்புற மாணவர்கள் சரியாக பங்கேற்க முடியாது. அந்த சிக்கலை களையும் வகையில் மாணவர்கள் வசதிக்காக இந்த வெப்சைட்டில் ஆசிரியர்கள் பாடம் நடத்திய வீடியோ பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். அதை மாணவர்கள் சென்று பார்த்து படிக்கலாம்.