×

நவ.16ல் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு பெயர் சேர்க்க, இடமாற்றம் செய்ய டிச.15 வரை மக்கள் மனு அளிக்கலாம்

கரூர், அக். 16:வரைவு வாக்காளர் பட்டியல் நவ.16ம்தேதி வெளியிடப்படுகிறது. பெயர் சேர்க்க, இடமாற்றம் செய்ய மக்கள் டிச.15ம் தேதி மனு அளிக்கலாம் கரூர் கலெக்டர் தெரிவித்தார். இந்திய தேர்தல் ஆணைய உத்தரவின்படி, கரூர் மாவட்டத்தில் உள்ள வாக்குச்சாவடி மையங்களை மறுவரையறை செய்வது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கரூர் கலெக்டர் அன்பழகன் தலைமை வகித்து பேசுகையில்,கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் அரவக்குறிச்சியில் 250 வாக்குச்சாவடி மையங்களும், கரூரில் 261 மையங்களும், கிருஷ்ணராயபுரத்தில் 253 மையங்களும், குளித்தலையில் 267 மையங்களும் என 1,031 மையங்கள் உள்ளன.

இந்த வாக்குச்சாவடி மைங்களின் படடியல்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகம், கோட்டாட்சியர் மற்றும் அனைத்து தாசில்தார் அலுவலகங்களிலும் வைக்கப்பட்டுள்ளது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கும் வரைவு வாக்குச்சாவடி மையங்களின் பட்டியல் வைக்கப்பட்டுள்ளது. வாக்குச்சாவடி மையங்களின் பெயர் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியவை, இடமாற்றம் செய்யப்பட வேண்டியவை, புதிதாக உருவாக்குதல், இணைத்தல், மாறுதல் செய்திடல் உள்ளிட்ட காரணங்களின் அடிப்படையில், கரூர் மாவட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களை மறுwவரையறை செய்திட வசதியாக சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களால் வாக்குச்சாவடி மையங்களின் விபரங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 1500 வாக்காளர்களுக்கும் அதிகமாக உள்ள வாக்குச்சாவடி மையங்களையும், வாக்காளர்களின் இருப்பிடத்தில் இருந்து 2கிமீ தூரத்திற்கும் அதிகமாக உள்ள வாக்குச்சாவடி மையங்களையும் பிரித்து புதிய வாக்குச்சாவடி மையங்கள் உருவாக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில், வாக்குச்சாவடி மையங்கள் மறுவரையறை செய்வது தொடர்பாக, அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் தங்களது முறையீடு மற்றும் கோரிக்கைகளை வாக்காளர் பதிவு அலுவலர் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர்களிடம் நவ.15ம்தேதிக்குள் எழுத்து மூலமாக தெரிவிக்க வேண்டும்.

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் துணை ஆட்சியர் நிலையிலான அலுவலர்கள் வாக்காளர் பதிவு அலுவலர்களாகவும், சம்பந்தப்பட்ட வட்டாட்சியர்கள் துணை வாக்காளர் பதிவு அலுவலர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். அந்த வகையில், கரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரூர் கோட்டாட்சியரும், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்கு சார் ஆட்சியரும், அரவக்குறிச்சி தொகுதிக்கு உதவி ஆணையரும் (கலால்), கிருஷ்ணராயபுரம் தொகுதிக்கு மாவட்ட வழங்கல் அலுவலரும் வாக்காளர் பதிவு அலுவலர்களாக செயல்படுவார்கள். தேர்தல் ஆணைய உத்தரவின்படி, நவம்பர் 16ம்தேதி அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன.

பொதுமக்கள் வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு நவம்பர் 16ம்தேதி முதல் டிசம்பர் 15ம்தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய மற்றும் இடமாற்றம் செய்ய அனைத்து வேலை நாட்களிலும் காலை 10மணி முதல் மாலை 5மணி வரை சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடி அமைவிட அலுவலர், வாக்காளர் பதிவு அலுவலர், வாக்காளர் பதிவு உதவி அலுவலர் ஆகியோர்களிடம் மனுக்களை அளிக்கலாம். வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் நீக்கம் செய்வதற்கு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும் தேதிகள் பின்னர் தெரிவிக்கப்படும்.

தேர்தல் ஆணைய அட்டவணையின்படி, 2021ம் ஆண்டிற்கான புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியல் 2021ம் ஆணடு ஜனவரி 20ம்தேதி அன்று வெளியிடப்படவுள்ளன. கரூர் மாவட்டத்தில் உள்ள நான்கு தொகுதிகளுக்கும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினர் நியமித்துள்ள வாக்குச்சாவடி நிலை முகவர்கள் (பிஎல்ஏஎஸ்) குறித்த விபரங்களை படிவம் பிஎல்ஏ1 மற்றும் பிஎல்ஏ2 ஆகியவை பூர்த்தி செய்து கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியுடன் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் வாக்காளர் பட்டியலை பார்வையிட்டு அதில் அவர்களது பெயர், புகைப்படம் மற்றும் இதர பதிவுகள் அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம் என்றார்.
இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், நேர்முக உதவியாளர் சந்தியா உட்பட அனைத்து அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Tags : public ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...