×

வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி ஒன்றிய கவுன்சிலர்கள் வெளிநடப்பு: பெரியபாளையத்தில் பரபரப்பு

ஊத்துக்கோட்டை: வேளாண் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி ஒன்றிய கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்ததால், பெரியபாளையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பெரியபாளையம் ஒன்றிய அலுவலகத்தில்  எல்லாபுரம் ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.  இதில், ஒன்றிய குழு தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சுரேஷ், பிடிஒக்கள் வெங்கடேசன், அகஸ்டீன்ராஜ்  ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேற்று காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்கியதும் தீர்மானங்கள் வாசிக்க தொடங்கினர். அப்போது, ‘திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகளை சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர்கள் 8 பேர், வேளாண் திருத்த சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்’ என்றனர்.  

இதைகேட்ட தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகியோர், ‘இது மத்திய அரசு கொண்டு வந்த சட்டம் இதற்கு எதிராக இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற முடியாது’ என்றனர். இதை கேட்ட திமுக கவுன்சிலர்கள் குணசேகரன், கல்பனா, ஜமுனா, கோகிலா, தனலட்சுமி, சுரேஷ், காங்கிரஸ் திருமலை, கம்யயூனிஸ்ட் ரவி உள்ளிட்ட 8 கவுன்சிலர்கள்  மன்றத்தில் இருந்து வெளியே வந்து கோஷங்களை எழுப்பினர். இதனால்,  கூட்டம் பாதியிலேயே முடிந்தது. இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Union councilors ,Periyapalayam ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலையொட்டி காவல்துறை...