உடன்குடி, அக். 2: உடன்குடி பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த சுகாதாரத்துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டபோதும் கட்டுப்படவில்லை. இந்நிலையில் நேற்று ஒரே நாளில் உடன்குடி அனல் மின்நிலைய ஊழியர்கள் 25 பேருக்கு கொரோனா உறுதியானது. அத்துடன் செட்டியாபத்தைச் சேர்ந்த 29 மற்றும் 23 வயதான இருபெண்களுக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இவ்வாறு கொரோனா உறுதியான இவர்களை, திருச்செந்தூர், தூத்துக்குடி அரசு மருத்துவமனைகளுக்கு சுகாதாரத் துறையினர் அனுப்பிவைத்தனர்.
இதைத்தொடர்ந்து மெஞ்ஞானபுரம் வட்டார மருத்துவ அலுவலர் அனிபிரின் தலைமையில் மருத்துவர்கள் ஆர்த்தி, நாயகி, ஜெயபரணி, சுகாதார மேற்பார்வையாளர் அருள்ராஜ், சுகாதார ஆய்வாளர் சுப்பையா மற்றும் சுகாதாரப்பணியாளர்கள் தொற்று பாதித்தோரிடம் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர்.