மதுரை, அக். 2: தமிழக அரசு கடுமையாக உயர்த்திய கட்டணத்தை செலுத்தாவிட்டால் மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்திற்குள் நுழைய நேற்று முதல் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் வீரர், வீராங்கனைகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய கிளைகள் தமிழகத்தில் 33 மாவட்டங்களில் இயங்கி வருகிறது. மதுரையில் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மதுரைக்கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு உள்விளையாட்டு அரங்கங்கள், சர்வதேச தரத்தில் தடகளம், ஹாக்கி உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளுக்கு பிரத்யேக மைதானங்கள் உள்ளன. இங்கு விளையாடுபவர்களுக்கு ஆரம்பத்தில் அடையாள அட்டை மட்டும் வழங்கப்பட்டது. பின்னர் மைதானத்திற்குள் விளையாட கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டது. இதற்கு அப்போதே வீரர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் மேலும் கட்டணத்தை விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கடுமையாக உயர்த்தியுள்ளது.
குறிப்பாக நடைபயிற்சி செல்வோர் 6 மாதத்திற்கான சந்தா தொகையை செலுத்த வேண்டும். அப்போதுதான் நடைபயிற்சி செல்ல அனுமதிக்கப்படுவர். தடகளத்திற்கு பள்ளி மாணவர்களுக்கு ரூ.100ம், கல்லூரி மாணவர்களுக்கு ரூ.150, பொதுவீரருக்கு ரூ.300 மாதம்தோறும் ஜிஎஸ்டியுடன் செலுத்த வேண்டும். குத்துச்சண்டை ரிங்கை பயன்படுத்த பள்ளி மாணவர் ஒருவருக்கு ரூ.500ம், கல்லூரி மாணவர் ஒருவருக்கு ரூ.750, பொதுவீரருக்கு ரூ.1500ஐ ஆண்டுக்கு ஒரு முறை செலுத்த வேண்டும். அதுபோல செஸ், கால்பந்து, ஹாக்கி, கைப்பந்து, டென்னிஸ் அனைத்து விளையாட்டுகளுக்குமான கட்டணங்கள் எகிறியுள்ளன. இந்த கட்டணத்தை செலுத்தாவிட்டால் மைதானத்திற்கு நுழைய நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வீரர், வீராங்கனைகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து வீரர்கள் சிலர் கூறுகையில், ‘‘தடகளம், கூடைப்பந்து, கபடி, கோகோ உள்ளிட்ட விளையாட்டுகளை பொருளாதாரத்தில் சாதாரண மாணவர்கள்தான் விளையாடுகின்றனர். இவ்வளவு பெரிய தொகையை அவர்களால் செலுத்த முடியாது. எங்களின் எதிர்காலத்தில் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மண் அள்ளிப்போட்டு வருகிறது’’ என்றனர்.