×

ராகுல்காந்தி கைது கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மறியல் போராட்டம்

ஈரோடு, அக். 2: உத்தரபிரதேச மாநிலத்தில் பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்யப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்வதற்காக நேற்று காங்கிரஸ் பொதுசெயலாளர் பிரியங்கா காந்தி வதேரா, காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் அங்கு சென்றபோது, போலீசார் அவர்களை கைது செய்தனர். இதனை கண்டித்து ஈரோடு மூலப்பாளையத்தில் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, உத்தர பிரேத முதல்வர் பதவி விலக வேண்டும், ராகுல் காந்தியை காட்டுமிராண்டி தனமாக தள்ளிய போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்கள் எழுப்பினர்.

இதைத்தொடர்ந்து போலீசார் தெற்கு மாவட்ட தலைவர் மக்கள் ராஜன், முன்னாள் எம்எல்ஏ பழனிச்சாமி உட்பட 30 பேரை கைது செய்தனர். இதேபோல், ஈரோடு மூலப்பட்டறையில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் தலைவர் ஈபி ரவி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், முன்னாள் தலைவர் ராஜேந்திரன், சிறுபான்மை பிரிவு தலைவர் சுரேஷ், விவசாய பிரிவு தலைவர் பெரியசாமி, துணை தலைவர்கள் பாஸ்கர் ராஜ், பாஷா, மண்டல தலைவர்கள் திருச்செல்வம், அம்புலி, விஜயபாஸ்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Congress ,party protests ,arrest ,Rahul Gandhi ,
× RELATED முன்மொழிந்தவர்களின் கையெழுத்தில்...