பவானி, அக். 2: பூட்டிய வீடுகளில் திருடுவதில் கைதேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்து 40 பவுன் நகையை பறிமுதல் செய்துள்ளனர். பவானி, கோபி சப்-டிவிசன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் பூட்டிய வீடுகளை நோட்டுமிட்டு தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வந்தது. இதையடுத்து எஸ்பி. தங்கதுரை உத்தரவின் பேரில், பவானி டி.எஸ்பி. கார்த்திகேயன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பவானி தேவேந்திரன், சித்தோடு கதிர்வேல் மற்றும் எஸ்.ஐ.க்கள் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் திருட்டு வழக்கு தொடர்பாக சேலம் மாவட்டம், மேட்டூர், கருமலைக்கூடல் பகுதியை சேர்ந்த லல்லு (எ) லல்லுபிரசாத் (29) என்பவரை நேற்று முன்தினம் தனிப்படை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், கடந்த 15 நாட்களில் மட்டும் பவானி, ஆப்பக்கூடல், சித்தோடு, கோபி, கவுந்தப்பாடி, பங்களாப்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் பூட்டிய வீடுகளில் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அவர் திருடியது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட லல்லு ஏற்கனவே பூட்டிய வீடுகளில் திருடியதாக பலமுறை கைது செய்யப்பட்டு சிறை சென்று வந்ததும் தெரியவந்தது. பூட்டிய வீடுகளில் திருடுவதில் ஸ்பெசலிஸ்ட் என்பதால் அதிக அளவில் கூட்டாளிகள் இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரிடமிருந்து ரூ.15 லட்சம் மதிப்பிலான 40 பவுன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், லல்லுவின் கூட்டாளிகளை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் கூறினர்.