×

ரயில்வேயில் வேலை என கூறி குமரியில் இன்ஜினியரிடம் ₹6 லட்சம் மோசடி

நாகர்கோவில், அக்.1:  கன்னியாகுமரி பரமார்த்தலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மகன் அருண் (26). பி.இ. முடித்துள்ளார். மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் இவர் ஒரு புகார் அளித்தார். அதில் கூறியிருப்பதாவது :பி.இ. (இசிஜி) முடித்துள்ள நான், வேலை தேடி வந்தேன். அப்போது உறவினர் மூலம், பார்வதிபுரம் பகுதியை சேர்ந்த ஜெயகுமார் (44) என்பவரின் தொடர்பு கிடைத்தது. தனியார் நிறுவனம் நடத்தி வரும் அவர், தனக்கு தெரிந்த நபர்கள் மூலம் ரயில்வேயில் உயர் அதிகாரி பணி வாங்கி தருவதாக கூறினார். இதற்காக ரூ.10லட்சம் செலவாகும் என்றும், முதற்கட்டமாக ரூ.6 லட்சம் தர வேண்டும் என்றார்.

இதற்கு சம்மதம் தெரிவித்து ஜெயக்குமாரின் நிறுவன வங்கி கணக்கிற்கு, ரூ.5 லட்சம் அனுப்பி வைத்தேன். மேலும் நேரில் ரூ.1 லட்சமும், கல்வி சான்றிதழ், ஆதார் கார்டு, போட்டோ, ரத்த பரிசோதனை  சான்று ஆகியவற்றை கொடுத்தேன். இவற்றை பெற்றுக் கொண்ட ஜெயக்குமார், 2 மாதத்தில் வேலை வாங்கி தருவதாக கூறினார். ஆனால் இன்னும் வேலை வாங்கி தர வில்லை. பணத்தை திரும்ப கேட்ட போது ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுக்கிறார். எனவே ெஜயக்குமாரிடம் கொடுத்த ரூ.6 லட்சம் பணம் மற்றும் கல்வி சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்களை வாங்கி தர வேண்டும். இவ்வாறு கூறி உள்ளார். இந்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரிக்க எஸ்.பி., உத்தரவிட்டார். இதையடுத்து குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, தற்போது ஜெயக்குமார் மீது மோசடி உள்ளிட்ட பிரிவின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர்.

Tags : engineer ,Kumari ,railways ,
× RELATED குமரியில் டாரஸ் லாரியால் தொடரும் விபத்து