மேல்மலையனூர், அக். 1:மேல்மலையனூர் தாலுகாவுக்கு உட்பட்ட கடலி கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இச்சமுதாய மக்களுக்காக வராகநதி கரையோரம் அரை ஏக்கர் பரப்பளவில் சுடுகாடு அமைந்துள்ளது. தற்போது அப்பகுதி முழுவதும் ஆக்கிரமிக்கப்பட்டு சிறிதளவு பகுதியே உள்ளது.வராக நதியில் மழைக்காலங்களில் நீர் வந்தால் சடலத்தை மயானத்துக்கு கொண்டு செல்ல முடியாத நிலை உள்ளது. கிராமப்பகுதி வழியாக சடலத்தை எடுத்து செல்வதற்கும் எதிர்ப்புகள் அதிகம் உள்ளதால் மக்கள் பெரும் பாதிப்படைந்து வருகின்றனர்.மேலும் அப்பகுதியில் உயிரிழப்பவர்களின் சடலங்களை மயானத்திற்கு கொண்டு செல்வதற்கு பாதை இல்லாததால் வயல்வெளி வழியாக சடலங்களை சுமந்து சென்று அடக்கம் செய்யும் அவலநிலை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
விவசாய நிலத்தின் வழியாகவே சடலத்தை சுமந்து செல்வதால் விவசாய பயிர்கள் சேதம் ஆவதும், விவசாயிகள் தகராறில் ஈடுபடுவதும் தொடர்கதையாகி உள்ளது.சுடுகாட்டு பாதை அமைத்து தரக்கோரி பலமுறை ஆட்சியரிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கிராம மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் இப்பிரச்னைக்கு உடனடி தீர்வு கண்டு சுடுகாட்டு பாதை அமைத்து தர வேண்டும் என அப்பகுதி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.