×

கழிவுநீர் கால்வாய் அமைக்கக்கோரி திடீர் மறியல் திருவண்ணாமலையில் பரபரப்பு

திருவண்ணாமலை, அக்.1: திருவண்ணாமலையில் கழிவுநீர் கால்வாய் அமைக்கக்கோரி பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை வேங்கிக்கால் ஊராட்சிக்குட்பட்ட குபேரன் நகர் 2வது தெருவில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி நேற்று நடந்தது. அப்போது, தெருவின் வலது பக்கத்தில் ஜேசிபி இயந்திரம் மூலம் கால்வாய் தோண்டும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு தரப்பினர், தெருவின் இடது பக்கத்தில் கால்வாய் அமைக்க வேண்டும், வலது பக்கம் அமைத்தால் தீக்குளிப்போம் என தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து, கால்வாய் அமைக்கும் பணி பாதியில் கைவிடப்பட்டு பணியாளர்கள் திரும்பிச் சென்றனர்.

இந்நிலையில், திட்டமிட்டபடி கால்வாய் அமைக்க வேண்டுமென அந்த தெருவின் மற்றொரு தரப்பினர் நேற்றிரவு 7 மணியளவில் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக போலீசார் விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமரசப்படுத்தினர். அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : sewerage canal ,Thiruvannamalai ,
× RELATED 1300 மெட்ரிக் டன் உரம் கொள்முதல் * ரயில்...