திருவண்ணாமலை, அக்.1: திருவண்ணாமலை மாவட்டத்தில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர், சமையலர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுகிறது. இதுகுறித்து, கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்திருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படும் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள 120 அமைப்பாளர், 150 சமையலர், 239 சமையல் உதவியாளர் பணியிடங்கள் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுகிறது. அமைப்பாளர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்டி பிரிவினர் 8ம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது. சமையலர் பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எஸ்டி பிரிவினர் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. விதவை, கணவனால் கைவிடப்பட்டோர் 8ம் வகுப்பு படித்திருந்தால் போதுமானது.
சமையல் உதவியாளர் பணிக்கு 5ம் வகுப்பு படித்திருக்க வேண்டும். எஸ்டி பிரிவினர் எழுத படிக்க தெரிந்திருந்தால் போதுமானது. மூன்று பணியிடங்களுக்கும் 20 வயது முதல் 40 வயது வரை விண்ணப்பிக்கலாம். எஸ்டி பிரிவினர் மட்டும் 18 வயது முதல் விண்்ணப்பிக்கலாம்.
காலிப்பணியிடங்களின் விபரம், சம்பந்தப்பட்ட பிடிஓ அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே, உரிய விண்ணப்பங்களை தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைத்து, சம்பந்தப்பட்ட பிடிஓ அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்களில் வரும் 8ம் தேதிக்குள் நேரில் அல்லது பதிவு அஞ்சலில் அனுப்பலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.