×

430 ஊராட்சிகளில நாளை கிராமசபை கூட்டம்

திருவாரூர், அக்.1: திருவாரூர் மாவட்டத்தில் 430 ஊராட்சிகளிலும் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு நாளை நடைபெறும் கிராமசபா கூட்டத்தில் பொதுமக்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர் பங்கேற்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று மாவட்ட கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: காந்தி ஜெயந்தியையொட்டி நாளை ( 2ம் தேதி) மாவட்டத்தில் உள்ள 430 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இதில் ஊராட்சி நிர்வாகம், பொது செலவினம், கொரோனா விழிப்புணர்வு மற்றும் தடுப்பு நடவடிக்கை, மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு உள்ளிட்ட நோய்களை கட்டுப்படுத்துதல், பிளாஸ்டிக் தடை அமல்படுத்துதல் உட்பட பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.

கிராமசபை கூட்டங்களில் அந்தந்த கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் மட்டுமின்றி சுய உதவிக்குழுவினர், வறுமை ஒழிப்பு சங்கத்தினர், தொண்டு நிறுவன பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வலர்கள் என அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் இவர்கள் அனைவரும் அரசின் உத்தரவுப்படி முக கவசம் அணிந்து கூட்டத்தில் பங்கேற்பதுடன், தனிமனித இடைவெளியையும் கடைபிடிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு கலெக்டர் ஆனந்த் தெரிவித்துள்ளார்.

Tags : Village council meeting ,
× RELATED கொட்டாம்பட்டி பகுதியில் சமூக தணிக்கை கிராம சபை கூட்டம்