×

வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி குத்திக்கொலை

கோவை, அக்.1: கோவையில் மூதாட்டி கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்டார். சொத்துக்காக கொல்லப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை வைசியாள் வீதி கெம்பட்டிகாலனியை சேர்ந்தவர் சிவானந்தம். இவருடைய மனைவி தனலட்சுமி (வயது 62). இவர்களுக்கு ஜெயந்தி என்ற மகளும், பிரகாஷ் பாகு, ரமேஷ், மணிகண்டன் ஆகிய 3 மகன்களும் உள்ளனர். சிவானந்தம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மணிகண்டன் தவிர பிற அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. இதனால் மணிகண்டனுடன் தனலட்சுமி வசித்து வந்தார். மணிகண்டன் வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டார். நேற்று இரவு தனலட்சுமி வீட்டில் தனியாக இருந்துள்ளார். வீடு பூட்டிக்கிடந்தது. தனலட்சுமி மட்டுமே வீட்டில் இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் கதவை தட்டினர்.

கதவை தனலட்சுமி திறந்ததும் அந்த நபர்கள் வீட்டுக்குள் புகுந்தனர். அவர்களிடம் தனலட்சுமி, ‘‘நீங்கள் எதற்கா இங்கு வந்தீர்கள்?’’ என்று கேட்டார். அதற்குள் அந்த மர்ம நபர்கள் தனலட்சுமியை கத்தியால் கழுத்து மற்றும் வயிறு பகுதியில் குத்தினர். அதில் தனலட்சுமி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார். தனலட்சுமியை கொன்றுவிட்டு அந்த மர்ம நபர்கள் அங்கு இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த நகை, பணத்தை கொள்ளையடித்து தப்பினர். வேலைக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய மணிகண்டன் வீட்டில் தனது தாய் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பதையும், நகை, பணம் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதையும் கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து பெரியகடைவீதி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று தனலட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தனலட்சுமியை கொள்ளையர்கள்தான் நகை, பணத்துக்காக கொன்றனரா? அல்லது சொத்துக்காக கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags : stabbing ,home ,
× RELATED நக்சல், தீவிரவாதத்தை ஒழிக்க மோடிதான்...