×

சாலைகளின் நிலை குறித்த அறிக்கை பெறும் வரை மதுரையில் புதிய ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்க தடை கோரி வழக்கு ஐகோர்ட் கிளை நோட்டீஸ்

மதுரை, அக். 1: மதுரை மாட்டுதாவணி ஒருங்கிணைந்த பஸ் ஸ்டாண்ட் குற்றாலம் ஆட்டோ டிரைவர் சங்க தலைவர் கருப்பையா, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரையில் 2200க்கும் மேற்பட்ட ஆட்டோக்களுடன் வாடகைக்கு இயக்கப்படும் கார், டூவீலர்களும் ஓடுகின்றன. தற்போது மதுரையில் பல இடங்களில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடப்பதால் போக்குவரத்து நெரிசல் நாளுக்குநாள் அதிகரிக்கிறது. இந்நிலையில் புதிய ஆட்டோக்களுக்கு அனுமதியளித்தால் நெரிசல் மேலும் அதிகரிக்கும். மதுரை நகரிலுள்ள சாலைகளின் நிலை, தரம், வாகனங்களின் எண்ணிக்கை குறித்த மத்திய அரசின் அறிக்கையை பெற்று தமிழக அரசின் கெஜட்டில் வெளியிடும் வரை புதிய ஆட்டோக்களுக்கு அனுமதி வழங்க கூடாது என உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், பி.ராஜமாணிக்கம் ஆகியோர் மனு குறித்து தமிழக போக்குவரத்து துறை முதன்மை செயலர், மதுரை கலெக்டர், ஆர்டிஓக்கள் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு விசாரணையை நவ.4க்கு தள்ளி வைத்தனர்.

Tags : Madurai ,roads ,
× RELATED மதுரை மீனாட்சி- சுந்தரேஸ்வரர் கோயில்...