சென்னை: சென்ட்ரல் வால்டாக்ஸ் சாலையில் உள்ள ஒரு தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் இருந்து வெளியூருக்கு போதை பொருட்கள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று அதிகாலை 3 மணியளவில் மத்திய வருவாய் புலனாய்வு துறை அதிகாரி பார்த்திபன் தலைமையில் 5 பேர் கொண்ட குழுவினர் அந்த பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் இருந்த பார்சல்களை அதிரடியாக சோதனை செய்தனர். அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் இருந்த பார்சலை பிரித்து பார்த்தபோது.
வெஸ்டன் டாய்லெட் பீங்கான் பார்சலில் பக்கவாட்டில் 25 கிலோ போதைப்பொருட்கள் பதுக்கி வைத்து இருப்பது தெரியவந்தது. இவற்றை பறிமுதல் செய்து தி.நகரில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வு துறை அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அந்த பார்சலை கொண்டுவந்து வெளியூருக்கு அனுப்ப முயன்ற நபர் யார், அவரது பெயர் குறித்து பார்சல் சர்வீஸ் நிறுவன பணியாளர்களிடம் விசாரிக்கின்றனர். இச்சம்பவத்தால் சென்ட்ரல் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.