×

கொரோனாவை தொடர்ந்து மாநகர பகுதிகளில் மிரட்டும் டெங்கு

ஈரோடு, செப். 30: கொரோனா தாக்கம் குறைவதற்குள் டெங்கு காய்ச்சல் பரவும் அபாயம் உள்ளதால், மாநகர பகுதிகளில் தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள சுகாதார பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக 6,500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 84 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். நாள் ஒன்றுக்கு சராசரியாக 130 பேர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், மாவட்டத்தின் மொத்த பாதிப்பில் 60 சதவீதம் பேர் ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர். இதையடுத்து மாநகர பகுதிகளில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர். ஆனாலும் கொரோனாவின் தாக்கம் குறையாமல் உள்ளது. இதனிடையே கொரோனாவை தொடர்ந்து டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளதால், மாநகர சுகாதார பிரிவு உஷார்படுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் இளங்கோவன் கூறியதாவது:
மாநகர பகுதிகளில் இலவச மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு தினமும் சராசரியாக 1000 பேர் பரிசோதிக்கப்படுகின்றனர். காய்ச்சல், சளி, இருமல், உடல் வலி என கொரோனா அறிகுறிகள் தென்பட்டால், அவர்களுக்கு மாநகராட்சி மருத்துவமனைகளில் உள்ள கொரோனா பரிசோதனை மையங்களுக்கு அழைத்து சென்று பரிசோதனை செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாகவும், பருவநிலை மாற்றம் காரணமாக கொசுக்கள் மூலம் டெங்கு காய்ச்சல் பரவ வாய்ப்பு உள்ளது.

இதனால், மாநகர பகுதிகளில் மழைநீர் தேங்காத வகையில் சாக்கடைகள் தூர்வாரப்படுகிறது. மேலும் மாநகர சுகாதாரத்துறை பிரிவு ஊழியர்கள் வீடு வீடாக சென்று டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்புடன் டெங்குவும் சேர்ந்தால் நிலைமை மோசமாகி விடும் என்பதால், தீவிர தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இது வரை டெங்கு பாதிப்பு எதுவும் உறுதிபடுத்தப்படவில்லை. ஆனாலும் மழை நீர் தேங்கினால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்றுக்கு வாய்ப்பு உள்ளது. இவ்வாறு ஆணையர் இளங்கோவன் கூறினார்.

Tags : areas ,Corona ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்களில்...