×

கவர்னர் பூச்சாண்டி காட்ட வேண்டாம் ஆட்சியை டிஸ்மிஸ் செய்தாலும் கவலைப்படமாட்டோம் முதல்வர் நாராயணசாமி ஆவேசம்

புதுச்சேரி, செப். 29: விவசாயிகளுக்கு எதிராக மத்திய பாஜ அரசு நிறைவேற்றிய 3 மசோதாக்களை எதிர்த்து  நாடு தழுவிய போராட்டம் நடத்த அகில இந்திய காங்கிரஸ் தலைமை தனது கட்சிக்கு உத்தரவிட்டது. அதன்படி தலைமை தபால் நிலையம் அருகே நடந்த போராட்டத்தில் லட்சுமி நாராயணன் எம்எல்ஏ, காங்கிரஸ் துணைத்தலைவர் தேவதாஸ், திமுக வடக்கு அமைப்பாளர் எஸ்பி சிவக்குமார், சிபிஐ மாநில செயலாளர் சலீம், முன்னாள் எம்எல்ஏ நாரா.கலைநாதன், சிபிஎம் பிரதேச செயலாளர் ராஜாங்கம், மாநிலக்குழு உறுப்பினர் முருகன், வி.சிறுத்தை முதன்மை செயலாளர் தேவ.பொழிலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்துக்கு தலைமை தாங்கி முதல்வர் நாராயணசாமி பேசுகையில், விதிமுறைகளுக்கு உட்பட்டுதான் போராட்டம் நடத்துகிறோம்.  விவசாயத்தை வர்த்தகமாக்குவது, உரிய விலை  கொடுப்பது, அத்தியாவசிய பொருட்கள் விலை குறித்த 3  சட்டத்தை மத்திய அரசு திருத்தியிருக்கிறது. பாஜக அரசுக்கு மக்களவையில் பெரும்பான்மை  பலம் உள்ளது. மாநிலங்களவையில்  பெரும்பான்மை இல்லாதபோதும், அதனையும் மீறி ஜனநாயக படுகொலை செய்து மசோதாவை நிறைவேற்றினர்.

விவசாயிகள் விரோத மசோதாவை கண்டித்து ராஜஸ்தான், மத்திய பிரதேசம்  உள்ளிட்ட மாநிலங்களில் போராட்டம் நடக்கிறது. சிறு விவசாயிகளின் இடத்தை  கார்ப்பரேட் நிறுவனங்கள்  குத்தகைக்கு எடுத்துக்கொள்வதுடன் விவசாயிகளை அடிமையாக்கி  கூலியாக்கி  விடுவார்கள்.  பொருட்களை எந்த மாநிலத்துக்கும், வெளி நாட்டுக்கும் ஏற்றுமதி  செய்யலாம் என்பது உள்ளிட்ட விவசாயிகளுக்கு எதிரான அம்சங்களால்,  கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவாகவும், அவர்களின் நலனை ஒட்டுமொத்தமாக அடகு  வைக்கவும் கொண்டுவரப்பட்டுள்ளது. ஏற்கனவே தொழிலாளர் சட்டத்தில் கை  வைத்துள்ளனர்.  இந்த போராட்டத்தை  நடத்தக் கூடாது என கவர்னர் எனக்கு கடிதம் எழுதினார்.

 முதலில் நான்  காங்கிரஸ் கட்சி தொண்டன்,  அதன்பிறகுதான் முதல்வர். என்னிடம் இந்த   பூச்சாண்டியெல்லாம் காட்ட வேண்டாம்.  பஞ்சாப் முதல்வரே இந்த மத்திய அரசின்  மசோதாவை எதிர்த்து தெருவில் இறங்கி போராடியிருக்கிறார். இந்த ஆட்சியை   டிஸ்மிஸ் செய்தாலும் கவலைப்பட மாட்டோம். எந்த தியாகமும் செய்ய தயாராக  இருக்கிறோம். இது ஆரம்பம்தான். கிராமம், கிராமமாக சென்று மக்கள் சக்தியை  திரட்டுவோம். எனவே, விவசாயிகளுக்கு எதிரான 3 சட்ட  மசோதாவை மத்திய அரசு வாபஸ்  பெற வேண்டும், என்றார்.

Tags : Narayanasamy ,Poochandi ,
× RELATED தேனி தொகுதி அதிமுக வேட்பாளரின் காரில் சோதனை