×

உறவினர் கொலை வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை விருத்தாசலம் நீதிமன்றம் தீர்ப்பு

விருத்தாசலம், செப். 29: உறவினர் கொலை வழக்கில் வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து விருத்தாசலம் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே உள்ள மேல்பாப்பனப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கொள்ளு மகன் செந்தில்முருகன் (35). இவர், பழைய நெய்வேலியை சேர்ந்த நல்லதம்பி மகள் செந்தமிழ்தேவி என்பவரை கடந்த 2015ம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த திருமணத்துக்கு செந்தமிழ்தேவியின் வீட்டில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனிடையே திருமணமான 2 வருடத்திலேயே கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு செந்தமிழ்தேவி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.

அவரை அழைத்து வருவதற்காக கடந்த 12.9.2017 அன்று செந்தில்முருகன் சென்றுள்ளார். அப்போது செந்தமிழ்தேவி  மற்றும் அவரது தாய் ஆகியோருடன் ஏற்பட்ட பிரச்னையால் செந்தில்முருகன் திரும்பி வந்து விட்டார். இதுகுறித்து தனது அண்ணன் ராமச்சந்திரனிடம் செந்தமிழ்தேவி தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ராமச்சந்திரன்(41) கையில் அரிவாளுடன் செந்தில் முருகன் வீட்டிற்குச் சென்று அவரை வெட்ட முயற்சித்துள்ளார். அப்போது செந்தில்முருகனின் சகோதரி மகன்களான சண்முகசுந்தரம், சிவபாலன் ஆகியோர் தடுத்துள்ளனர். அப்போது 3 பேருக்கும் சரமாரி அரிவாள் வெட்டு விழுந்தது. அதில் சிவபாலன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற இருவரும் வெட்டு காயங்களுடன் உயிர் தப்பினர்.
இதுகுறித்து சண்முகசுந்தரம் கொடுத்த புகாரின் பேரில், மந்தாரக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து ராமச்சந்திரனை கைது செய்தனர்.

விருத்தாசலம் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் மாவட்ட கூடுதல் அரசு வழக்கறிஞர் விஜயகுமார் ஆஜராகி வாதாடி வந்தார். இந்நிலையில் வழக்கின் தீர்ப்பு நேற்று வெளியானது. அதில் ராமச்சந்திரன் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் 1,100 ரூபாய் அபராதம் விதித்து மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி இளவரசன் தீர்ப்பளித்தார். அதனைத் தொடர்ந்து ராமச்சந்திரனை போலீசார் கடலூர் மத்திய சிறைக்கு அழைத்துச் சென்றனர்.

Tags : teenager ,Vriddhachalam ,court ,prison ,
× RELATED மனைவியின் தங்கையான சிறுமியை கடத்தி...