சேலம், செப்.29: சேலம் காவேரில் மருத்துவமனை தலைமை இருதய சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜேந்திரன் கூறியதாவது:
உலகம் முழுவதிலும் 17.3 மில்லியன் மக்கள் பக்கவாதம் மற்றும் இருதய நோயினால் இறக்கிறார்கள் என்பதை மக்களுக்கு அறிவுறுத்த, கடந்த 2000 ஆண்டில் உலக இருதய தினம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் நோக்கம், வேலை செய்யும் இடம் மற்றும் வீட்டில் இருதய நோய் பாதிப்பில்லாத ஆரோக்கிய சூழலை உருவாக்குவது ஆகும். இருதய நோய் ஒரு ஆட்கொல்லி நோய். பதப்படுத்தப்பட்ட உணவுகள், உட்கார்ந்தே பணியாற்றும் சூழ்நிலை, செல்போன், இணையதளம் போன்றவை இதற்கு காரணம் ஆகும். இந்த தாக்கம் இளைய தலைமுறையினரை அதிகம் முடக்குகிறது. உப்பு, வெண்ணெய், நெய்யை குறைத்து, ஆலிவ் மற்றும் அரிசி எண்ணெய், அதிக நார்ச்சத்துள்ள உணவு, காய்கறிகள், பழங்கள் பயன்படுத்த வேண்டும். புகை பிடிப்பதை கை விட்டு, தினமும் குறைந்தது 30 நிமிடம் உடற்பயிற்சி மேற்கொண்டு, உடல் எடையை சீராக பராமரிக்க வேண்டும். சரியாக கையாளாத மன அழுத்தம், மாரடைப்பு மற்றும் பக்கவாதத்திற்கு வழிவகுக்கும். மன அழுத்தத்தை சமாளிக்க உடலை தளர வைக்கும் முறைகள், நேர மேலாண்மை, இலக்கு அமைத்தல், மூச்சு பயிற்சி மற்றும் யோகா போன்றவை செய்ய வேண்டும். இதனால் உங்களது இருதயம் வலிமையாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.