×

காவிரி ஆற்றில் மூழ்கி மாணவன் பரிதாப பலி


மொடக்குறிச்சி, செப்.29: நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அடுத்த சத்தியபுரி அருகேயுள்ள மேல்நிலைப்பள்ளி சாலை பகுதியை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மனைவி பரமேஸ்வரி. இவர்களுக்கு ராமன்(14), லக்குமன்(14) என்ற 2 இரட்டையர்களும், கீதா(19) என்ற மகளும் உள்ளனர். சகோதரர்கள் இருவரும் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ராமன், லக்குமன், கீதா மற்றும் இவரது அத்தை மகன் தீனதயாளன் (30), ஆகிய 4 பேர், காரில் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த காங்கேயம்பாளையத்தில் காவிரி ஆற்றின் நடுவே உள்ள நட்டாற்றீஸ்வரர் கோயிலுக்கு சாமி கும்பிட வந்துள்ளனர்.

அப்போது, காவிரி ஆற்றில் லக்குமன், ராமன் ஆகிய இருவரும் குளித்துள்ளனர். அப்போது லக்குமன் ஆழமான பகுதிக்கு சென்றால், ஆற்றின் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டான். ராமன் கரைக்கு திரும்பி உயிர் தப்பினான். லக்குமன் காவிரி ஆற்றில் அடித்து செல்வதை கண்டு சத்தம் போடவே, அருகில் இருந்தவர்கள் மீட்க முயன்றனர். ஆனால், அவர்களால் முடியவில்லை. இதையடுத்து அங்கிருந்தவர்கள் மொடக்குறிச்சி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த தீயணப்பு படை வீரர்கள் நீரில் அடித்துச்சென்ற லக்குமனை, நீண்ட நேரத்திற்கு பின் சடலமாக மீட்டனர். இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Student ,river ,Cauvery ,
× RELATED மங்களகோம்பை செல்லும் சாலையில் புலியூத்து ஆற்றின் குறுக்கே பாலம் தேவை