×

இலவச மின் இணைப்பு வழங்க விவசாயியிடம் ₹27 ஆயிரம் லஞ்சம் வாங்கிய உதவி பொறியாளர் கைது

விழுப்புரம், செப். 26:  மயிலம் அடுத்த கீழ்எடையாளம் கிராமத்தை சேர்ந்தவர் பாலச்சந்தர்(37), விவசாயி. இவருக்கு சொந்தமாக கீழ்எடையாளத்தில் ஒரு ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் உள்ள ஆழ்துளை கிணற்றில் இருந்து மின்மோட்டார் மூலம் விவசாய பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக இலவச மின்சார இணைப்பு கேட்டு கடந்த 2001ம் ஆண்டு திண்டிவனம் மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் பதிவு செய்தார். 18 வருடங்களுக்கு பிறகு பாலச்சந்தருக்கு
இலவச மின் இணைப்பு வழங்க உத்தரவு வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து உரிய ஆவணங்களுடன் மயிலம் உதவி மின் பொறியாளர் அலுவலகத்திற்கு சென்று, அங்கிருந்த உதவி பொறியாளரான செஞ்சி நரசிங்கனூரை சேர்ந்த புருஷோத்தமன்(33) என்பவரை அணுகி தனக்கு, விவசாய பயன்பாட்டுக்காக இலவச மின் இணைப்பு வழங்கும்படி கேட்டுள்ளார். அதற்கு இலவச மின் இணைப்பு வழங்க ரூ.27 ஆயிரம் தரும்படியும், பணம் கொடுத்தால் மட்டுமே இலவச மின் இணைப்பு வழங்க முடியும் என்றும் கூறியுள்ளார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத பாலச்சந்தர், இது குறித்து நேற்று விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் கொடுத்தார். இதை தொடர்ந்து பாலச்சந்தர் ரசாயன பொடி தடவிய பணத்தை எடுத்துக்கொண்டு நேற்று மாலை மயிலத்தில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றார். அங்கு புருஷோத்தமன் இல்லாததால், அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, செண்டூரில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு வெளியே, தான் இருப்பதாகவும் அங்கு வந்து பணத்தை கொடுக்கும்படியும் கூறியுள்ளார். அதன்படி செண்டூரில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த புருஷோத்தமனிடம் பணத்தை கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி யுவராஜ், தலைமையிலான இன்ஸ்பெக்டர் அன்பழகன், காவலர்கள் விஜயதாஸ், பாலமுருகன் ஆகியோர் புருஷோத்தமனை பிடித்து கைது செய்தனர்.

பின்னர் அவரை விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கடந்த சில நாட்களுக்கு முன், விழுப்புரம் நகராட்சி நகர அமைப்பு அலுவலர் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒரு அரசு ஊழியர் கைது செய்யப்பட்டிருப்பது அரசு ஊழியர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Assistant engineer ,
× RELATED பாலக்கோடு அருகே வாகன சோதனையில் ₹95 ஆயிரம் பறிமுதல்