திருப்பூர், செப்.26: திருப்பூர் அரசு மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நேற்று மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் தமிழ்வேந்தன் தலைமை வகித்தார். அரசு மருத்துவமனையின் நிர்வாகத்தை மாற்ற வேண்டும். அலட்சிய மரணங்களுக்கு காரணமான மருத்துவர்களை பணி நீக்கம் செய்ய வேண்டும். நோயாளிகளையும், பார்வையாளர்களையும் அச்சுறுத்தும் வகையில் மிரட்டும் ஒப்பந்த பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சுற்றுப்புற சுகாதாரம் இல்லாமல் இருக்கும் மருத்துவமனை வளாகத்தை தூய்மைப்படுத்த வேண்டும். பிரசவ வார்டில் ஏழை, எளிய மக்களை மிரட்டி லஞ்சம் வாங்குபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகை போராட்டம் நடந்தது. இதில், மாவட்ட துணை செயலாளர்கள் சத்யன், செல்வம், மாவட்ட பொருளாளர் செளகத் அலி உள்பட பலர் கலந்து கொண்டனர்.