×

கெங்கவல்லி அருகே தொழிலாளி பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை தற்கொலை நாடகமாடிய மனைவி கைது

கெங்கவல்லி, செப்.25: கெங்கவல்லி அருகே கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்த கட்டிட தொழிலாளியை, பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றுவிட்டு, அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய மனைவியை போலீசார் கைது செய்தனர். சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே வீரகனூர் வெள்ளையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் சின்னசாமி(48). கட்டிட மேஸ்திரியான இவர், திருச்சிக்கு வேலைக்கு சென்று வந்தார். இவரது மனைவி சகுந்தலா(46). இவர்களுக்கு சின்னதுரை(26) என்ற மகனும், மஞ்சு(23) என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 11ம் தேதி இரவு 7 மணிக்கு, வேலைக்குச் சென்று விட்டு வீடு திரும்பிய சின்னசாமி, உடல் கருகிய நிலையில் அலறி துடித்தார். சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டனர். அப்போது, குடும்பத்தகராறில் உடலில் பெட்ரோல் ஊற்றி கணவன் தீக்குளித்து விட்டதாக, சகுந்தலா தெரிவித்தார். சிறிது நேரத்தில் அவர் உயிரிழந்தார்.

வீரகனூர் போலீசார் உடலை கைப்பற்றி விசாரித்தனர். இதில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால், சகுந்தலா தனது கணவன் மீது பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்றது தெரிய வந்தது. இதையடுத்து, சகுந்தலாவை காவல்நிலையத்திற்கு அழைத்துச்சென்று இன்ஸ்பெக்டர் முருகன், எஸ்ஐ தினேஷ்குமார் ஆகியோர் விசாரித்தனர். அப்போது, அவர் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது: கெங்கவல்லி அருகே ஆணையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த அந்தோணியுடன் எனக்கு கள்ளத்தொடர்பு இருந்தது. இதையறிந்த எனது கணவர் பலமுறை கண்டித்தார்.

ஆனால், நான் கள்ளத்தொடர்பை தொடர்ந்ததால், அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டது. கள்ளத்தொடர்புக்கு இடையூறாக இருந்ததால் அவரது குடிப்பழக்கத்தை பயன்படுத்திக்கொண்டு, கொலை செய்ய முடிவு செய்தேன். அதன்படி, சம்பவத்தன்று பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்துவிட்டு, மண்ணெண்ணை ஊற்றி தற்கொலை செய்து கொண்டதாக கூறி நாடகமாடினேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து, தற்கொலை வழக்கை கொலை வழக்காக மாற்றிய போலீசார், சகுந்தலாவை கைது செய்தனர். பின்னர், அவரை ஆத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில், சகுந்தலாவை சேலம் சிறையில் அடைத்தனர். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கட்டிட தொழிலாளியை மனைவியே தீர்த்துக்கட்டிய சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Kengavalli ,
× RELATED அரசமரத்துக்கு தீ வைத்த மர்ம நபர்கள்