×

கேஆர்பி அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

ஓசூர், செப்.25: தென்பெண்ணை ஆற்று நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால், கேஆர்பி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. தென்பெண்ணை ஆற்றின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து குறைவதும், அதிகரிப்பதுமாக உள்ளது. இந்நிலையில், கடந்த சில நாட்களாக தென்பெண்ணை ஆற்று பகுதியில் கனமழை பெய்து வந்தது. இதனால், கடந்த 3 நாட்களாக கெலவரப்பள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் 560 கன அடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை அதே அளவில் நீடித்தது. அணையின் பாதுகாப்பு கருதி, 560 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில், தற்போது 39.03 அடிக்கு தண்ணீர் உள்ளது. அதே போல் கிருஷ்ணகிரி கேஆர்பி அணைக்கு கடந்த 3 நாட்களாக 114 கன அடியாக இருந்து நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி 225 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையின் மொத்த உயரமான 52 அடியில், தற்போது 40.85 அடிக்கு தண்ணீர் உள்ளது. அணையில் இருந்து 114 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Tags : KRP ,dam ,
× RELATED பைக்காரா அணையின் நீர்மட்டம் சரிவு ; படகு சவாரிக்கு 100 படிகள் இறங்க வேண்டும்