×

மகாராஜநகர் ரயில்வே பாலப் பணி 8 மாதத்தில் முடிக்க நடவடிக்கை

நெல்லை, செப். 25:   பாளை. மகாராஜநகர் உழவர் சந்தை அருகே ரயில்வே பாலம் அமைக்கும் பணியை அடுத்த 8 மாதத்தில் முடிக்க ரயில்வே துறையினர் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். நெல்லை மாநகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக பல்வேறு ரயில்வே மேம்பால பணிகள் செயல்படுத்தப்பட்டன. தச்சநல்லூர் மற்றும் முன்னீர்பள்ளம் பகுதியில் ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு போக்குவரத்திற்கு திறந்துவிடப்பட்டது. ஆனால் பாளை மகாராஜநகர் ரயில்வே மேம்பாலம் பணியை நெடுஞ்சாலைத்துறையினர் முடித்த நிலையில் மையப்பகுதியில் ரயில்வே டிராக் மேல்பகுதியில் ரயில்வே துறையினர் பாலம் இணைப்பு பணி செய்வது பல மாதங்களாக தொய்வு ஏற்பட்டது.

இதன் அருகே உள்ள சில ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் சட்ட சிக்கல் நீடித்தது. இதில் இருந்து விடுபட்ட நிலையில் தற்போது  இந்த பகுதியிலும் பாலம் அமைக்கும் பணி கடந்த ஒரு மாதமாக நடைபெற்றுவருகிறது. தற்போது ரயில் போக்குவரத்து நடைபெறாததால் 49.4 மீட்டர் தூர இணைப்பு பணிகள் தடையின்றி பணிகள் நடக்கின்றன. மையப்பகுதியை இணைக்கும் பாலம் டெக் பகுதிக்காக பில்லர் அமைக்கும் பணி இரவு பகலாக நடக்கிறது. இந்தப்பாலம் மொத்தம் ரூ.26.30 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்படுகிறது. 695.426 மீட்டர் நீளம், 8.05 மீட்டர் அகலத்தில் 9 தூண்களுடன் உருவாகிறது. ரயில்வே கிராசிங் பகுதியை நடந்து கடப்பவர்களுக்கு வசதியாக 10.70 மீட்டர் அகலத்தில் அருகே சுரங்கப்பாதையும் அமைகிறது.இப்பாலம் பணி மையப்பகுதியில் முழுமையாக முடிந்தால் பாலத்திலும் போக்குவரத்து துவங்கும். அடுத்த 8 மாதங்களுக்குள் பணிகளை முடிக்க திட்டமிட்டுள்ளனர்

Tags : Maharajnagar Railway Bridge ,
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது