புதுச்சேரி, செப். 25: பாராளுமன்ற கூட்டத்தொடரில் புதுச்சேரி எம்.பி., வைத்திலிங்கம் காரைக்காலில் இருந்து பேரளத்துக்கு ரயில்வே பாதை அமைக்கும் பணியின் தற்போதைய நிலை என்ன, காரைக்காலில் 2020 சனி பெயர்ச்சி விழாவுக்கு முன்னதாக இப்பணி முடிவடையுமா, அப்படியெனில் அது குறித்த விவரத்தை தெரிவிக்கவும் என கேள்ளி எழுப்பி இருந்தார். இந்த கேள்விக்கு மத்திய ரயில்வே துறை அமைச்சர் பியூஸ் கோயல் அளித்துள்ள பதிலில், காரைக்கால் ஏற்கனவே திருவாரூர் - பேரளம் வழியாக ரயில்பாதையில் இணைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக நேரடியாக பேரளத்தில் இருந்து காரைக்காலுக்கு 23 கிலோமீட்டர் தூரத்துக்கு திருச்சிராப்பள்ளி தஞ்சாவூர் நாகூர் - காரைக்காலுக்கு ரயில்பாதை அமைக்கும் திட்டத்துக்கு 2019 ஜனவரியில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டம் ரூ.177.69 கோடியில் மேற்கொள்ளப்பட உள்ளது. இத்திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்துவதற்கான ஆவணங்கள் கடந்த 2019 செப்டம்பரில் மாநில அரசிடம் வழங்கப்பட்டுள்ளது. 100 சதவீத நிலம் கையகப்படுத்தப்பட்ட பின்னர் இப்பணி மேற்கொள்ளப்படும். எந்த ஒரு ரயில்வே திட்டங்களும் நிறைவு பெறுவதற்கு மாநில அரசுகளால் நிலம் விரைந்து கையகப்படுத்தி தருதல், நிலத்தை பயன்படுத்தி வருபவர்களை இடமாற்றம் செய்வது, சட்டரீதியான அமைப்புகளிடம் அனுமதி பெறுவது, திட்டம் மேற்கொள்ளப்பட இருக்கும் பகுதியின் புவியியல் மற்றும் நிலப்பரப்பு நிலைமைகள், திட்டம் மேற்கொள்ளப்படுவதால் அப்பகுதியில் ஏற்படும் சட்டம் ஒழுங்கு பிரச்னை உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் திட்டத்தின் நிறைவு செய்யும் காலத்தை பாதிக்கின்றன. எனவே, தற்சமயம் திட்டம் நிறைவு பெறும் காலத்தை தெரிவிக்க இயலாது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.