தொண்டி, ஆக.22: தொண்டியில் விநாயகர் சிலை அதிகளவில் விற்பனை நடக்காததால், பொதுமக்கள் தாங்களே களிமண்ணில் சிலை தயார் செய்து கொண்டனர். இந்த வருடம் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு தடை விதித்ததால் தொண்டி உள்ளிட்ட பகுதியில் விநாயகர் பொம்மைகள் விற்பனை செய்யவில்லை. இதனால் ஆர்வமுடன் கடை வீதிகளுக்கு வந்த பொது மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். கிராமங்களில் சிறுவர்கள் குளத்திலிருந்து களிமண் எடுத்து பிள்ளையார் செய்தனர்.
இது குறித்து பகவதி கூறுகையில், விநாயகர் சதுர்த்தியன்று விதிமுறைக்கு உட்பட்டு கோவிலில் சாமி கும்பிட அரசு அனுமதி அளித்துள்ளது. இருப்பினும் பிள்ளையார் சிலைகள் வாங்கி வீட்டில் வைத்து வணங்கி குளம் மற்றும் கடலில் கரைப்பது வழக்கம். இம்முறை அனுமதி இல்லாததால் களை இழந்துள்ளது. களிமண் எடுத்து சிலை செய்துள்ளோம். இவற்றை வீடுகளில் வைத்து வழிபட்டு கடலில் கரைக்க உள்ளோம் என்றார்.