ஊட்டி,ஆக.22:விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ள போதிலும், நீலகிரி மாவட்டத்தில் 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் விநாயர் சதுர்த்தி மற்றும் விசர்ஜன ஊர்வலம் விமர்சையாக இந்து அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் சார்பில் நடத்தப்படுகிறது. கடந்த சில ஆண்டுக்கு முன் இந்த ஊர்வலத்தின் போது இரு அமைப்புக்களிடையே பிரச்னை ஏற்பட்டது. இதனால்,நீலகிரி மாவட்டத்தில் விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு கண்காணிப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இம்முறை விநாயகர் சிலை பொது இடங்களில் வைக்கவும், ஊர்வலம் நடத்தவும் உயர் நீதிமன்றம் தடை விதித்தது. எனினும், இதனை மீறி ஊர்வலம் நடத்தப்படும் என சில அமைப்புகள் தெரிவித்தன. இதனால், நீலகிரி மாவட்டத்தில் வழக்கம் போல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் 900 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள், வாகன தணிக்கை, ரோந்து பணிகளில் ஈடுபடுவார்கள் என காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும், விநாயகர் சிலைகளை கோயில்கள் மற்றும் வீடுகளில் வைத்துள்ளவர்கள், நாளை (இன்று) தங்களது குடியிருப்புகளுக்கு அருகில் உள்ள நீரோடைகளை விஜர்சனம் செய்து கொள்ளவும், ஒருவர் மட்டுமே சிலையை எடுத்துச் செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.