×

தொழிலதிபர் வீட்டில் 40 சவரன் கொள்ளை மர்ம நபர்களை பிடிக்க 5 தனிப்படைகள்

திருப்போரூர், மார்ச் 20: கேளம்பாக்கம் அருகே  கழிப்பட்டூரில் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் கார்த்திக் (32). தொழிலதிபர். கடந்த சில நாட்களுக்கு முன் கார்த்திக், தனது மனைவி மற்றும் குழந்தையை பார்க்க வேலூர் சென்றார். இதில், கடந்த 17ம் தேதி இரவு அவரது வீட்டை உடைத்து உள்ளே நுழைந்த மர்மநபர்கள், அங்கிருந்த ₹25 லட்சம், 40 சவரன் நகைகளை கொள்ளையடித்து சென்றனர். புகாரின்படி கேளம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு ெசய்து, அங்கு பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தனர். அதில், கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது வடமாநில ஆசாமிகள் என போலீசாருக்கு தெரிந்தது. தொடர்ந்து போலீசார், கைரேகைகளை வைத்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், கொள்ளை நடந்த வீட்டை நேற்று 2வது நாளாக மாமல்லபுரம்  (பொறுப்பு) டி.எஸ்.பி. அருள்மணி, கேளம்பாக்கம் இன்ஸ்பெக்டர் ராஜாங்கம் ஆகியோர் ஆய்வு செய்தனர். கொள்ளையர் எந்த வழியாக வீட்டுக்குள்  நுழைந்தனர், வேலைக்கு சென்று விட்டு நள்ளிரவு நேரங்களில் வேலை முடிந்து  திரும்புபவர்கள் யார் என ஆய்வு மேற்கொண்டனர். இதை தொடர்ந்து இக்கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்மநபர்களை பிடிக்க பல்வேறு  ரயில் நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமராக்களையும் ஆய்வு செய்ய போலீசார் முடிவு  செய்துள்ளனர். மேலும், சம்பவம் நடப்பதற்கு 2 நாட்களுக்கு முன்பில் இருந்து வேலைக்கு வராத  வெளிமாநில தொழிலாளர்கள் பட்டியலை சேகரித்துள்ளனர். இதற்கிடையில், கொள்ளையர்களை பிடிக்க கேளம்பாக்கம், தாழம்பூர், திருப்போரூர்,  கல்பாக்கம், திருக்கழுக்குன்றம் ஆகிய காவல் நிலையங்களை சேர்ந்த 5  இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.

Tags : units ,robbery mystery men ,house ,businessman ,
× RELATED மேட்டூர் அனல்மின் நிலையத்தில் 2வது நாளாக மின் உற்பத்தி பாதிப்பு