×

வத்திராயிருப்பு, ராஜபாளையத்தில் அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிப்பு

வத்றாப்/ராஜபாளையம், மார்ச் 20: வத்திராயிருப்பு பேரூராட்சியில் கொரோனா வைரஸ் வராமல் தடுப்பதற்கு பஸ், ஆட்டோ, தாசில்தார் வாகனம், நிழற்குடை, வருவாய்த்துறை அலுவலகம், உள்ளிட்டவற்றில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. செயல் அலுவலர் கண்ணன் தலைமை வகித்தார். கோட்டையூர் அரசு மருத்துவர் இந்திரா ஜெயராமன் முன்னிலை வகித்தார். இதேபோல் வத்திராயிருப்பு அருகே புதுப்பட்டி பஸ் நிலையத்தில் கொரோனா வைரஸ் பரவாமல் தடுக்க ஆட்டோக்கள் ஆகியவற்றில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. செயல் அலுவலர் சிவஅருணாச்சலம் தலைமை வகித்தார். சுகாதாரத் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர். புதுப்பட்டி பேரூராட்சியில் கைகழுவும் முறை பற்றிய விளக்கங்களை சுகாதார ஆய்வாளர் லிங்கமுத்து தெரிவித்தார்.

சிவகாசி யூனியன் அலுவலகத்தில் வெளியில் வாளிகளில் தண்ணீர் வைக்கப்பட்டு, ஹேண்ட் வாஷ் லிக்விட் வைக்கப்பட்டுள்ளது. அலுவலகத்திற்கு வருகின்ற அலுவலர்கள், பயனாளிகள் கை , கால்களை நன்கு கழுவிய பின் வந்தனர். மேலும் ஒன்றிய துணை தலைவர் விவேகன்ராஜ், பி.டிஓ.க்கள் ராமமூர்த்தி, ரவி ஆகியோர் கை, கால்களை கழுவிய பின்னர் அலுவலகத்திற்குள் சென்றனர். அடிக்கடி கைகளை சோப்பு போட்டு கழுவவேண்டும் என்றும், ஒவ்வொரு முறையும் கை கழுவ குறைந்தபட்சம் 30 வினாடிகள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. தும்மல் மற்றும் இருமல் சமயங்களில் கைக்குட்டை பயன்படுத்த வேண்டும் என்றும் யூனியன் அலுவலர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இதுதொடர்பான துண்டு பிரசுரங்களும் வினியோகிக்கப்பட்டன.

ராஜபாளையம் ஆவரம்பட்டியில் இயங்கும் 1வது போக்குவரத்து பணிமனையில் பணியாற்றும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்களுக்கு கொரோனா தொற்று ஏற்படாத வகையில் அனைவருக்கும் முக கவசம் வழங்கப்பட்டது. மேலும் பணிமனையில் இருந்து வெளியேறும் அனைத்து பேருந்துகளிலும் தடுப்பு மருந்து தெளிக்கப்பட்டது. ராஜபாளையம் அருகே செட்டியார்பட்டி நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் நகர தலைவர் மணிகண்டன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் துண்டு பிரசுரங்களை வழங்கினர். நகர துணைதலைவர்கள் ராமசாமி, ராமச்சந்திரன், நகர செயலாளர் தனுஷ்கோடி, நகர இளைஞர் காங்கிரஸ் கமிட்டி தலைவர் நவநீத கிருஷ்ணன் மற்றும் ஆறுமுகம், குருசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : offices ,Rajapalayam ,
× RELATED ஓட்டுநர் உரிமம், வாகன பதிவு சான்றுக்கு...