×

மேலூர் அருகே பீரோவை உடைத்து நகை, பணம் திருட்டு

மேலூர், மார்ச் 20: மேலூர் அருகே பூட்டியிருந்த வீட்டை உடைத்து பீரோவில் இருந்த தங்கம், வெள்ளி, ரொக்கம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடிச் சென்றனர். மதுரை மேலூர் அருகே வெள்ளநாதன்பட்டியை சேர்ந்தவர் சோமன் மனைவி பூர்ணவள்ளி (52). கணவனை இழந்த இவருக்கு 3 ஆண் குழந்தைகள் உள்ளனர். இவர்கள் அனைவரும் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகின்றனர். பூர்ணவள்ளிக்கு சொந்தமாக கோட்டநத்தம்பட்டி அருகில் உள்ள பழையூர்பட்டியிலும் வீடு உள்ளது. அவ்வப்போது இவர் அங்கு சென்று விட்டு திரும்புவது வழக்கம்.

நேற்று முன்தினம் பழையூர்பட்டிக்கு சென்றுள்ளார். இவரின் வீட்டு கதவு உடைக்கப்பட்டுள்ளதாக, பக்கத்து வீட்டுக்காரர் இவருக்கு நேற்று காலை தகவல் தர உடனடியாக வெள்ளநாதன்பட்டி வீட்டிற்கு திரும்பி உள்ளார். அப்போது வீட்டின் முன் மற்றும் பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டிருந்தது. அத்துடன் உள்ளே இருந்த 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு, 1 கிலோ வெள்ளி பொருட்கள், 4 பவுன் தங்க நகைகள், ரொக்கம் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து பூர்ணவள்ளி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து மேலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Theft ,jewelery ,Melur ,bureau ,
× RELATED சென்னை திருவொற்றியூரில் விசாரணைக்கு...