பழநி, மார்ச் 20: பழநி கோயிலில் கும்பாபிஷேக பணிகள் துவங்கி உள்ள நிலையில் ரூ.6 கோடி மதிப்பீட்டில் புனரமைப்புப்பணி நடக்க உள்ளது.
தமிழகத்தில் அதிக பக்தர்கள் வரும் கோயில்களில் முதன்மையானது பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில். இக்கோயிலில் கடந்த 2006ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். அதன்படி 2018ல் நடைபெற்றிருக்க வேண்டிய கும்பாபிஷேகம் நீதிமன்ற ஒப்புதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் காரணமாக நடத்தப்படவில்லை. பல்வேறு தரப்பினரின் கோரிக்கையின் அடிப்படையில் தற்போது கும்பாபிஷேகம் நடத்த ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
கும்பாபிஷேக பணிகளுக்காக கடந்த டிசம்பர் மாதம் 2ம் தேதி பாலாலயம் நடத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து ராஜகோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களின் சன்னதிகளில் உள்ள கோபுரம் போன்றவை சீரமைப்பு, கட்டிடங்கள் புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுமென அறிவிக்கப்பட்டது. கடந்த 1 வருட காலத்தில் கும்பாபிஷேகம் நடத்தப்படுமென தெரிவிக்கப்பட்டது. இதன்படி முதற்கட்டமாக தற்போது 18 பணிகளுக்கு சுமார் ரூபாய் 6 கோடி மதிப்பீட்டில் டெண்டர் விடப்பட்டுள்ளது. டெண்டர் இறுதி செய்யப்பட்டு விட்டதைத்தொடர்ந்து ஆகம விதிகளுக்குட்பட்டு ராஜகோபுரம் சீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகள் இன்னும் 1 வார காலத்திற்குள் துவங்க உள்ளதாக கோயில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.