சேந்தமங்கலம், மார்ச் 20: காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சியில் சுகாதார வளாகம், 5 ரேஷன் கடைகள் என 75 லட்சம் மதிப்பில் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிக்கான பூமி பூஜையை சந்திரசேகரன் எம்எல்ஏ தொடங்கி வைத்தார். காளப்பநாயக்கன்பட்டி பேரூராட்சி 11வது வார்டு நஞ்சுண்டாபுரத்தில், 7.50 லட்சம் மதிப்பில் நவீன சுகாதார வளாகம், சேந்தமங்கலம் ஒன்றியம் பெரியகுளம் ஊராட்சி திருவள்ளுவர் காலனியில் 2 லட்சம் மதிப்பில் சுகாதார வளாகம், கொல்லிமலை ஒன்றியம் வாழவந்திநாடு, தண்ணிமாத்திப்பட்டி, செம்மேடு, வாசலூர்பட்டி, செங்கரை ஆகிய பகுதிகளில் மலைவாழ் மக்கள் மேம்பாட்டு நிதியில் இருந்து 5 ரேஷன் கடைகள் 75 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நடந்தது.
நிகழ்ச்சியில் சந்திரசேகரன் எம்எல்ஏ கலந்து கொண்டு, பணிகளை தொடங்கி வைத்தார். இதில் கொல்லிமலை ஒன்றியக்குழு தலைவர் மாதேஸ்வரி, காளப்பநாயக்கன்பட்டி செயல் அலுவலர் யசோதா, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பிரகாஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் ஜெகதீசன், மாதேஸ்வரன், லேம்ப் கூட்டுறவு சங்க தலைவர் ராஜேந்திரன், இளநிலை உதவியாளர் அன்வர் பாஷா உட்பட பலர் கலந்து கொண்டனர்.