சூளகிரி, மார்ச் 20: சூளகிரி அருகே ஒட்டர்பாளையம் உள்ளிட்ட கிராமங்களுக்கு பஸ் வசதியின்றி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சூளகிரி அருகே சின்னகுத்தி, ஆனுசோனை, தொட்டூர், ஒட்டர்பாளையம், மாரண்டப்பள்ளி, பொனல்நத்தம், பீர் பள்ளி, பிக்கனப்பள்ளி, தேக்களப்பள்ளி, சென்னப்பள்ளி, முருக்கனப்பள்ளி, தேவர்குட்டளப் பள்ளி, அழகுபாவி, கொப்பலும்பூர் மருதாண்டப்பள்ளி, ஓமதேப்பள்ளி, திருமலை கவனிக்கோட்டா, சாமனப்பள்ளி, கூட்டூர், அலேசீபம், ஆழியாளம், போடூர் உள்பட 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராம பகுதி மக்கள் பஸ்சுக்காக தினமும் 3 முதல் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து வர வேண்டிய நிலை உள்ளது. இதனால், கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘எங்கள் கிராம பகுதிகளுக்குள் பஸ்கள் வந்து செல்வதில்லை. இதுகுறித்து பலமுறை புகார் கொடுத்தும் பயனில்லை. 3 முதல் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்து மெயின் ரோட்டிற்கு வந்து தான், பஸ் பிடித்து வெளியிடங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. எனவே, மெயின் ரோட்டில் செல்லும் பஸ்கள் கிராமங்களுக்குள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அல்லது மினி பஸ் வசதியாவது ஏற்படுத்த வேண்டும்,’ என்றனர்.