பண்ருட்டி, மார்ச் 20: பண்ருட்டி வ.உ.சி.தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன் மகன் விக்னேஷ்(21). இவர் தன் வீட்டின் முன் நின்றிருந்த மினிலாரியை பின்புறம் எடுத்துள்ளார். அப்போது, பின்புறமிருந்த அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயன், புகழேந்தி, செந்தில் ஆகிய மூவரும் ஏன் எங்களை இடிப்பது போன்று வண்டி ஓட்டுகிறாய் என கேட்டு தகராறு செய்துள்ளனர். இது கோஷ்டி மோதலாக மாறியது. இதில் விக்னேஷ், புகழேந்தி இருவரும் படுகாயமடைந்து பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். சம்பவம் குறித்து விக்னேஷ், புகழேந்தி இருவரும் தனித்தனியாக பண்ருட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் போலீசார் இரு தரப்பை சேர்ந்த 8 பேர் மீது வழக்கு பதிந்து புகழேந்தி(34), ஐயப்பன்(32), செந்தில்(33), விக்னேஷ்(21), வெங்கடேசன்(46), வடிவேல்(32) ஆகியோரை கைது செய்து மற்றவர்களை தேடி வருகின்றனர்.