உளுந்தூர்பேட்டை, மார்ச் 20: உளுந்தூர்பேட்டை அருகே அயன்குஞ்சரம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி மகன் சங்கர்(29). இவர் சம்பவத்தன்று ஒரு பைக்கில் வ.சின்னக்குப்பம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும் பைக்கில் உளுந்தூர்பேட்டை நோக்கி வந்து கொண்டு இருந்தார். அரசு போக்குவரத்து கழக பணிமனை எதிரில் வந்த போது அங்கிருந்த வேகத்தடை தெரியாமல் திடீரென பிரேக் போட்ட போது நிலைதடுமாறி கீழே விழுந்தார். இதில் தலையில் பலத்த காயம் அடைந்த சங்கரை அங்கிருந்தவர்கள் மீட்டு உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளித்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிகிக்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்தில் சங்கரின் தாய் சின்னப்பொண்ணு(55) என்பவர் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் எழிலரசி வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறார்.