×

நீடாமங்கலம் பகுதிகளில் முன்னறிவிப்பின்றி தொடர் மின்வெட்டு

நீடாமங்கலம், மார்ச் 20:நீடாமங்கலம் பகுதியில் முன்னறிப்பின்றி அடிக்கடி மின்நிறுத்தம் ஏற்படுவதால் பொதுமக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் கடும் அவதி அடைந்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பகுதிகளில் சித்தமல்லி காயில் வெண்ணி, பரப்பனாமேடு, கடம்பூர், காளாச்சேரி, ராயபுரம், பூவனூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் கோடை சாகுபடி பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. அதேபோன்று நீடாமங்கலம் பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகள், தொழில் நிறுவனங்கள், அலுவலகங்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 10 நாட்களுக்கு மேலாக நாள் ஒன்றுக்கு 24 மணி நேரத்திற்கு 15 தடவையாவது மின் நிறுத்தம் ஏற்படுவதால் விவசாயிகள், வர்த்தகர்கள் மிகவும் கவலையடைந்துள்ளனர். காலை மாலை நேரங்களில் அலுவலகங்களுக்கு செல்பவர்கள் நேரத்தில் மின்சாரம் இல்லாததால் மிக்சி, கிரைண்டர், வாசிங் மிஷின்களை சரியான நேரத்தில் பயன்படுத்த முடியாமல் அவதியுற்று வருகின்றனர். சுட்டெரிக்கும் வெயிலால் கடைகளில் வேலை பார்ப்பவர்கள் மிகவும் அவதியுறுகின்றனர். இதுதொடர்பாக கோவில்வெண்ணி மின் பகிர்வு அலுவலகத்தில் தொடர்பு கொண்டு பேசினால் சரியான பதில் கிடைக்க வில்லை. எனவே சம்மந்தப்பட்ட மின்வாரிய பகிர்வு நிலையத்திலிருந்து தட்டுபாடின்றி மின்சாரம் வழங்க வேண்டும் என விவசாயிகள், வர்த்தகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Needamangalam ,
× RELATED கோடை நடவு பயிரில் எலிகளை கட்டுப்படுத்த பறவை தாங்கி